Tuesday, 18 February 2014

நெஞ்சிருக்கும்வரை.

நெஞ்சிருக்கும்வரை.......!

கற்பினைக் காக்கத் தானே                       
கடைசி மட்டும் போராடியே
களங்கம் நீத்த கன்னியுன்
காலடி தொழு கிறேன்.                                                                          

பேரூந்தி லிருந்தோ ரெலாம்
பேயடித்துச் செத்த போதும்
வீரமங்கை யுன் பலத்தில்
வென்று நீ வித்தானாய்..

தலை நகராம்  தில்லியோ
தலை தாழ்ந்து குனிந்தது.
தாய்க் குலமோ உன்னாலே
தலை நிமிர்ந்து துணிந்தது.

உடல் சிதைந்து வீழ்ந்தாலும்
உயிர் பறக்கச் சிறகுகள் விரித்தாலும்
குற்ற வாளிகள் யாரானாலும்
கூண்டில் ஏற்றெனக் கர்ஜித்தாய்...

என் போன்ற பெண்ணெவர்க்கும்
இந் நிலைமை வேண்டாமென
உந் நுயிரை ஓயவிட்டாய்
கண் ணெல்லாம் கதறவிட்டாய்.

நிர்பயா நின் வீரம்--நின்று
நெறிகாட்டும் பாவையர்க்கு.
துர்கை நீ மறு பிறப்பாய்
தோன்றி வதம் செய்ய வேண்டும்.

நெஞ் சிருக்கும் வரையும் 
உன் னினை விருக்கும்-உன்
வெஞ் சினச் சூழுரையும்
விதைத் திருக்கும்.

உலகை விட்டு மறைந்தாலும்
உன்னை யாரும் மறக்கவில்லை
வீரமங்கை விரு தளித்து
வீர வணக்கம் செய்கிறோம்..

கொ.பெ.பிச்சையா.



No comments:

Post a Comment