Tuesday, 25 February 2025

அவளே எல்லாம்.

அவளே எல்லாம்!

அவளே சொல்லாம்
அவளே மொழியாம்
அவளே அன்பாம்
அவளே எல்லாம்.

அவள்தான் அம்மா.
அவள்தான் ஆரம்பம்.
அவளின் உயிராம்.
அவள் கொடை வாழ்வாம்.

அவள் தந்த உதிரம்
அவள் அதன் ஓட்டம்
அவள் வடித்த உடலாம்
அவள் அளித்த கடனாம்.

அவள் கொடுத்த உண்ணீர்.
அவள் நினைவுக் கண்ணீர்.
அவள் பாடிய தாலாட்டு
அவள் துதிப் பாராட்டு.

அவள் விரித்த மடிப்பு
அவள் கனவின் விரிப்பு.
அவள் அணைத்த பாசம்
அவள் வம்சம் வீசும்.

அவள் பதித்த முத்தம்
அவள் அடைந்த இன்பம்.
அவள் கொண்ட சித்தம்
அவள் அருள் செல்வம்.


கொ.பெ.பிச்சையா.







Monday, 24 February 2025

தாலாட்டு.

தாலாட்டு

ஆராரோ ஆரிரரோ
அன்னக்கிளி கண்ணுறங்கு
ஊராரும் தூங்கிவிட்டார்
ஒருச்சாமம் ஆயிடுச்சு
உன்விழிகள் துஞ்சலியோ
உற்றதென்ன கண்மணியே.

கள்ளிப்பால் ஊட்டுவேனோ
கட்டித்தங்கம் ராசாத்தி!.
அள்ளிவீசிப் போடுவேனோ
அரசாள பிறந்தவளே!
காலம் கூடிக் கனியுதடி
கண்ணுறங்கு பொன் மகளே!.

பெண்ணாப் பிறந்தோமென்று
பிஞ்சுக்கொடி கலங்காதே
கண்ணாலச் சந்தையெண்ணி
கவலைப்பட்டும் மயங்காதே
கல்விகற்று உயர்ந்துவிட்டால்
கால்தொழுவார் கண்ணுறங்கு!

வீரம்பெற்று பெண்களின்று
வித்தைகளும் கற்றுவிட்டார்
தீரமுற்றுப் பெண்களின்று
திசையெங்கும் வென்றிட்டார்..
பெண்ணடிமை  ஒழியுதம்மா
பெண்ணரசி கண்ணுறங்கு.

ஈழங்கூடி மலருதம்மா
இளந்தளிரே கண்ணுறங்கு!
நாளுங்கொடி உயருதம்மா
நன்மணியே கண்ணுறங்கு!
வேளையதும் வளருதம்மா
விடியட்டும் கண்ணுறங்கு!

சூலம் குத்தி ஆடுதம்மா
சூரத்தமிழ் கண்ணுறங்கு!
காலம் வென்று தேடுதம்மா
கரும்புலியே கண்ணுறங்கு!
பாலம் ஒன்றும் போடுதம்மா
ஈழம் கூடக் கண்ணுறங்கு!

கொ.பெ.பி.அய்யா.






மங்கை மகிமை.

மங்கையர் மகிமை.

மங்கையராய் பிறந்தவர் மாதவம் செய்தவர்.
கங்கை போலவர் களங்கம் அல்லாதவர்.
மூன்றாம் பருவம் ஈன்றார் கருவம்.
பூவின் வாசம் பூத்தே வீசும்.
காதல் மலரும் கட்டும் அலரும்
காவல் தாண்டவும் ஆவல் தூண்டும்.

கொ. பெ. பிச்சையா.