Friday, 7 March 2014

மகளிர் தினம்.

மகளிர் தினத்தில் இன்று!
.
மாதராய்ப்  பிறப் பதற்கோ
மாதவம்  செய்தனரோ வென
ஏங்கிய கவிஞரும் விரும்பி
மாதராய்ப் பிறப்பரோ இன்று..
மகளீர் படுந் துயரங்களை
மனந் தாங்கிக் கொள்வரோ!

மகளீர் தின நாளின்று
மகளீர்க்கோ மகிழ்ச் சியில்லை.
மகளீரும் மனித ரென்றே
மதிக்கத் தெரியா நாய்களால்..
மலர் சூடும் பெண்டீரினி
மடிக் கத்தி சூடுவரோ!

ஆசைப் பொருளோ மாதரும்?.
அலையும்  வேசைப் பயல்களே!
மானுடமே தலை குனிந்து
மனம் நொந்து துடிக்கிறதே!
வெறி நாய்கள்  ஒழிப்போமே!
வேலு நாச்சி  எழுமுன்னே.


கோ.பெ.பி.அய்யா.



Thursday, 6 March 2014

கோலமென்ன பெண்ணே!

கோலம் போடும் பெண்ணே

கோலம் போடும் பெண்ணே—உன்
கோலம் பாடத் துணிவாயா?
தாலாட்டும் பெண்ணே—உன்
தகவென்ன அறிவாயா?

கோலம் போடத்தானா பெண்
குலத்தினில் பிறந்தாயா?
தாலாட்ட மட்டுந்தானா நீ
தாயாக வந்தாயா?

வீட்டுக்கு மனைவியென்றால்—வெறும்
வீட்டுவேலை செய்யத்தானா?
பெண்ணென்று பிறந்துவிட்டால்—அவள்
பிள்ளைப் பெறும் எந்திரமா?

உணர்வென்ற ஒன்றது--காண்
உனக்குள்ளும் உண்டல்லவா?
கனவென்ற கற்பனையும்—உனை
கணக்கிலது கொள்ளவில்லையா?

ஆறாவது அறிவதனை—ஏன்
ஆண்டவனும் மறந்தானா?
இருப்பதை நீமறந்து—ஒரு
எடுபிடி ஆனாயா?

அழகையும் அறிவையும்—ஆம்
ஆணைவிட பெண்ணுக்கே
அதிகமாய் அள்ளித்தந்தும்.—வீண்
புதையலாய் ஒளித்தாயா?

படைப்பினில் குறையில்லை-இவர்
பழக்கியதுதான் சரியில்லை.
சதியென மெய்யுணர்ந்து—மெய்
விதியெழுத எழுகவே!!

கொ.பெ.பி.அய்யா.