Thursday, 6 March 2014

கோலமென்ன பெண்ணே!

கோலம் போடும் பெண்ணே

கோலம் போடும் பெண்ணே—உன்
கோலம் பாடத் துணிவாயா?
தாலாட்டும் பெண்ணே—உன்
தகவென்ன அறிவாயா?

கோலம் போடத்தானா பெண்
குலத்தினில் பிறந்தாயா?
தாலாட்ட மட்டுந்தானா நீ
தாயாக வந்தாயா?

வீட்டுக்கு மனைவியென்றால்—வெறும்
வீட்டுவேலை செய்யத்தானா?
பெண்ணென்று பிறந்துவிட்டால்—அவள்
பிள்ளைப் பெறும் எந்திரமா?

உணர்வென்ற ஒன்றது--காண்
உனக்குள்ளும் உண்டல்லவா?
கனவென்ற கற்பனையும்—உனை
கணக்கிலது கொள்ளவில்லையா?

ஆறாவது அறிவதனை—ஏன்
ஆண்டவனும் மறந்தானா?
இருப்பதை நீமறந்து—ஒரு
எடுபிடி ஆனாயா?

அழகையும் அறிவையும்—ஆம்
ஆணைவிட பெண்ணுக்கே
அதிகமாய் அள்ளித்தந்தும்.—வீண்
புதையலாய் ஒளித்தாயா?

படைப்பினில் குறையில்லை-இவர்
பழக்கியதுதான் சரியில்லை.
சதியென மெய்யுணர்ந்து—மெய்
விதியெழுத எழுகவே!!

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment