வேலா உன்னெழில் காட்சி--பல
நாளா வேண்டிய மாட்சி
அருளை வேண்டி வந்தேன் --உன்
மகிமை கண்டு வியந்தேன்.
கருணைக் கடலே முருகா--பல
பெருமை அறிந்த சிறுவா.
உருவைக் கண்டு உவந்தேன்--உன்
அருமை இன்று உணர்ந்தேன்.
கந்தா என்றால் என்ன --பல
கவர்ந்த ஒன்றா தன்னே!
இந்தா என்றே வழங்கும்--உன்
இரங்கும் மனமே துலங்கும்.
அழகின் வடிவம் தமிழே--பல
உலகின் படிவம் அமுதே.
மொழியின் இனிமைக் குணமே--உன்
விழியின் கருணைத் தினமே.
மயிலும் சேவலும் உனதோ--பல
பயிலும் ஆவலும் தனதோ.
கூவும் குரல்கள் அதுவோ--உன்
ஏவும் கரங்கள் பொதுவோ.
யாவும் வினைகள் நீயே--பல
யாதும் செயல்கள் தாயே.
மேவும் நாட்கள் நலமே--உன்
ஈவும் அருளும் வரமே.
கவிஞர். கொ. பெ. பிச்சையா.