அடிமைகளோ
பெண்ணினம்!
பாரதியும் மறைந்தானோ!
பெண்ணுரிமையும் மறந்ததோ!
அன்றே சொன்னேன் நானுமே!
ஒன்றாய்ப் பெண்கள் கூடினால்,
உலகை வென்றும் ஆளலாம்
இன்னும் ஏன் அடிமையாம்?
பெண்ணுரிமை மடிந்ததா?
என்ன இதுக் கொடுமையோ!
தன்னறிவும் இல்லையோ!
துணிவும் எழ வில்லையோ!
தொன்மையின் மடமையோ!
பணிவதே பெண் விதியோ!
கண்களை விலை கொடுத்தா?
வண்ணோவியம் வாங்குவது!
பெண்ணவளை அலங்கரித்து
பேயிடத்துக் கொடுப்பதோ!
என்னதான் சுகங்கண்டாள்.
எல்லாமே இல்லமென்றாள்.
தன்னையே அர்ப்பணித்தாள்
தனக் கென்று என்னக் கொண்டாள்?
தியாகத்தின் வடிவமாக
வியாதியின் விளக்க மாக
தவறிடுஞ் செயலுக்கும்
தானேதான் பொறுப்பானாள்.
தொட்டதுக்கும் குற்ற மென்பார்.
பட்டதுக்கும் பழி சுமப்பாள்.
கெட்டுக் குப்பை அடியாளென்பார்.
பட்டமரம் அளென்பார்.
அஞ்சனம் கொஞ்சும் விழி
அஞ்சி வழியக் கருத்ததோ!
மஞ்சனம் மணக்கும் மேனி
வெஞ்சூட்டால் வெளுத்ததோ!
பூச் சூடும் கார்க் கூந்தல்,
நாய்களாடும் குப்பை மேடோ!
ஏச்சுக்கும் பேச்சுக்கும்,
இவளென்ன விலைமகளோ!
சமைக்க வந்த வேலைக் காரியோ!
சாப்பாட்டுக்கு பிச்சைக் காரியோ!
விலை கொடுத்து வந்தவளோ
விலை மகனுக்கு அடிமையோ!
பெண்ணுக்குப் பெண்ணெதிரி.
கண்ணுக்கு கண்ணெதிரி
மருமகளா வந்தவளே மாமியார்
மறுபறவிக் கொடுமைக்காரியோ!
அவள் கொண்ட கொடுமைகளே,
இவள்தலையில் விடிந்ததோ!
நாளை இவள் அப்படித்தான்
நிலைமை மாறிச் செய்வாளோ!
எத்துணைப் பெண்ணுக்கு!
இப்புவியிற் கொடுமைகள்!
செத்தொழியும் வேளைக்கூட
சீவனுக்கு அமைதியில்லை!
பெத் தணைத்தப் பிள்ளையும்
பெரு மைக்கான கணவனும்
ஊர் உறவுக்குப் பொய்யாக
தேரனுப்பப் பாலூற்றுவார்.
அனைத்தையும் அவள் மறந்து
அப்போதும் கண்ணொழுகி
பிணை துறந்து ஏகுவாளோ!
பெண்ணெனும் பாவ மகள்!
கவிஞர்.கொ.பெ.பிச்சையா.
No comments:
Post a Comment